Tuesday, June 9, 2015

​புகைப்படம் எடுக்கும் போது தேவையான பாதுகாப்புகள்

2 comments:
 
#1


புகைப்படம் எடுக்கும் போது போதிய எச்சரிக்கை/ பாதுகாப்பு இன்றி விபத்துகள் நேர்வதைக் கேள்விப் படுகையில் மனம் மிகவும் வருத்தம் அடைகிறது.   புகைப்படக்கலை அருமையானது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உயிர் யாவினும் விட மேன்மையானது. பாதுகாப்பே நம் முதல் நோக்கம். 

சில பாதுகாப்புக் குறிப்புகள். உங்களுக்கு உதவக் கூடும். 
​​
​1 -  புகைப்படம் எடுக்க சற்றே ஆபாத்தான இடம் என்றாலும்  தனியாகச் செல்வதை தவிர்க்கவும்.  ​

2 - தவிர்க்க இயலாத  சூழலில் அப்படி சென்றே ஆக வேண்டி இருப்பின் கண்டிப்பாக குடும்பத்தாரிடம் உரிய தகவல்கள் அளித்துவிட்டுச் செல்லவும். 

3 -  அலைபேசியை மறக்க வேண்டாம். புகைப்படம் எடுக்குமிடத்தில் ஓரிரு நாட்கள் தங்க வேண்டி இருப்பின், கட்டாயம் பவர் பேங்க் ( Power Bank )  கையிருப்பு வைத்திருங்கள், எந்த சமயத்திலும் .

​4 -  உங்களுடைய கேமரா / லென்ஸ் அனைத்தின் சீரியல் நம்பர்களை தனியாக  அலைபேசியிலோ, தனிப் புத்தகத்திலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  இக்கட்டான சூழல்களில் கண்டிப்பாக உதவும். உதாரணத்திற்கு, தவற விட்டுப் பின் காவல் நிலையத்தில் சென்று பெற்றுக் கொள்வதோ, நண்பர்களுடன் இருக்கும் போது மாறி மற்றொருவரிடம் சென்றுவிட்டாலோ, இந்த விவரங்கள் உடனடியாக உதவும். 

5 - தங்களின் புகைப்பட உபகரணங்கள் எப்போதும் தங்களுடனே இருக்கட்டும். அதிகம் அறிமுகமற்ற/ சற்று முன் தான் அறிமுகமான நபர்களிடம் கொடுப்பதை தவிர்க்கவும். நீங்கள் புகைப்படம் எடுக்கும் இடத்தை ஆராயவேண்டும் என்றாலும், உபகரணங்களை பாதுகாப்பின்றி  தனித்து விடவேண்டாம்.

6 - நீங்கள் புகைப்படம் எடுக்கப் போகும் இடத்தின் நெறிமுறைகளை முதலிலேயே அறிந்துக் கொள்வது உத்தமம். சில இடங்களில் பெண்களைப் புகைப்படம் எடுப்பது குற்றமாக இருக்கலாம்.  சில இடங்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப் பட்ட இடமாக இருக்கலாம் அல்லது தனியாரின் சொந்த இடமாக இருக்கலாம்.  அந்த இடத்தின் சட்ட திட்டங்களை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் அமைத்துக் கொள்வது நல்லது. சில இடங்களில் முன் கூட்டிய அனுமதி தேவைப் படும். அதை மீறாமல் நடப்பது நல்லது. 

7 -  ​ நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு உடையைத் தேர்ந்தெடுத்தல் நலம்.  வானிலை நிலைமை பார்த்து  அதற்கேற்றவாறு தக்க உடைகளை எடுத்துச் செல்லுங்கள்.
#2

8 - எந்தச் சூழலிலும் வழுக்கி விடாத வகையில் காலணிகள் அணியுங்கள்.  நல்ல  ஷூ அணிவது  உங்கள் கால்களை மட்டுமல்ல,  உபகரணங்களையும் சேர்த்து பாதுகாக்கும். நீங்கள் விழுந்து கூடவே உபகரணங்கள் விழுந்தால் அவற்றின் சேதம் உங்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன ?

9 - செல்ஃபி எடுக்கும் போது சூழலை கவனியுங்கள். சற்றே அபாயகரமான இடம் என்றாலுமே, தயவு செய்து உங்களின் பாதுகாப்பின் மீது அதிக  கவனம் செலுத்துங்கள்.  சமீபத்தில்  பாய்ந்து வரும் அலையின் பின் புறமாகக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்ட ஒரு இளைஞரின் கடைசிப் படமாக அது அமைந்தது வேதனைக் குறியது.  அலை இழுத்துச் சென்ற அம்மாணவனின் உடல் சிலநாட்களுக்குப் பிறகே தேடிக் கண்டெடுக்கப்பட்டது என்பது மற்றொரு சோகம்.

10 - சாலைகள், இரயில் தடங்களில் புகைப்படம் எடுக்கும் போது அதீத எச்சரிக்கை தேவை.
#3
நம் எதிரே நின்று பார்க்கும் போது வண்டியின் வேகம் நமக்கு அவ்வளவாகப் புலப்படாது. அது நம்மைக் கடந்து செல்லும் போது உணரும் வேகம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது உணர இயலாது. அதை சரியாக கவனிக்காமல் போகும் பட்சத்தில் அது பேராபத்தில் முடியலாம்.
#4

11 -  புகைப்படக் கருவிகள் அதிக விலையில் இருப்பின் அதற்கு இன்ஸூரன்ஸ் செய்துக் கொள்வது நல்லது.
#5
12 - சில இடங்களில் வைக்கப் பட்டு இருக்கும் எச்சரிக்கைப் பலகைகளில் இருக்கும் வாசகத்தை மதியுங்கள். அவை நம் பாதுகாப்பிற்கானவை என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். 

13 -  புகைப்படக் கருவிகள் சுமந்து செல்லும் பைகளில், அவை புகைப்படக் கருவிகளுக்கானவை என்ற அடையாளங்கள் இருப்பதை தவிர்க்கவும். இது பெரும்பாலான திருடர்களிடம் இருந்து உங்கள் உடைமைகளை  பாதுகாக்க உதவும். 

14 - ஒரு இடத்தின் அழகில் மெய் மறந்து அதிலேயே இருந்து விடவேண்டாம். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எச்சரிக்கை உணர்வு வேண்டும்.  திருடர்கள், வாகனங்கள், விலங்குகள் போன்றவை உங்களுக்கு எச்சரிக்கை தந்துவிட்டு வருவதில்லை.  
#6
15 - எங்கு புகைப்படம் எடுத்தாலும்,  தன்னம்பிக்கை (Confident) உடன் எடுங்கள்.   இங்கு எடுப்பது தவறோ, யாரேனும் கவனிக்கிறார்களோ, தவறு செய்கிறோமோ என்ற முக, உடல் பாவனைகள் அந்த இடத்தில் இருக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளுக்குச் சாதகமாக்கி விடும்.

16 -  புகைப்படம் எடுக்கும்  இடங்களில் தங்களை யாரும் தொடர்ந்து கண்காணிப்பதாகவோ, அல்லது பின் தொடர்வதாகவோ உணர்ந்தால் உடனடியாக தேவையான பாதுகாப்புக்கு உதவியை நாடுங்கள்.    தவிர்க்க இயலாத நேரத்தில் உங்கள் உடைமைகளையும் விட உயிர் பெரியது. புரிந்து நடந்துக் கொள்ளுங்கள். 

17 - புகைப்படம் எடுக்க செல்லும் இடங்களின் மொழியின் அடிப்படை வார்த்தைகள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.   அந்த இடத்து மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தர அது உதவும்.  எப்படியும் எந்த ஒரு இடத்திலும் உதவியர்களுக்கு நன்றி சொல்ல மறக்கமாட்டீர்கள் அல்லவா ?
**

படங்கள் 3,4: ஐயப்பன் கிருஷ்ணன்
படங்கள் 1,2,5,6: ராமலக்ஷ்மி
***

2 comments:

  1. மிகவும் உபயோகமான தகவல், தகவலுக்கு நன்றி

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff