
PiT ஆரம்பம் மிகவும் எளிமையான இனிமையான ஒரு வலையுலக நிகழ்வு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். அதே சமயம் இந்த புகைப்படப் போட்டி, பாடங்கள், படங்கள், பட்டறைகள் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரும் இந்த இணையக்குழுவினரின் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை புகைப்படச் சுற்றுலாக்கள். நண்பர் ஜீவ்ஸ் மற்றும் மங்களூர் சிவா அவர்கள் ஒருங்கிணைப்பில் 17 புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் பெங்களூரிலிருந்து ஒரு வெள்ளி இரவு வாடகை சிற்றுந்தில் கூர்க் நோக்கி பயணமானோம்... (பயணிக்கும் போது புதியவரான லக்குவனாரை செமையாக கலாய்த்தது தனிக்கதை.. ). அதிகாலை 5.30 மணிக்கு கூர்க் மாவட்டத்தின் தலைநகரான மடிக்கேரி சென்றடைந்தோம். மேகங்களூடே மலைமுகடுகள் துறுத்திக்கொண்டிருந்த அற்புதகாட்சி.. என் கண்ணுக்குள்ளே இன்னும் விரிகிறது! மதியம் ஒரு சிறு ஓய்வுக்குப் பின்பு தலைக்காவிரி நோக்கி பயணமானோம். வழியெங்கும் காபித்தோட்டங்கள்.. தலைக்காவிரியில் ஒரு சிறுகுழாயில் தண்ணீர்வடிவது போல் ஊற்றாகப் பிறக்கிறாள் காவிரித் தாய். அருமையான காட்சிகள் பலவற்றை படம்பிடித்து மீண்டும் மடிக்கேரி வந்தடைந்தோம். அன்றைய சனி இரவுக் கொண்டாட்டம் கலைகட்டியது.. பின்னவீனத்துவம் முதல் பதிவுலக நிகழ்வுகள் வரை மிக மிக நகைச்சுவையோடு (சிபியும், மோகன் தாசும் இளவஞ்சியும், சிவாவும், நிலா அப்பாவும் இருக்கையில் கலகலப்புக்கு என்ன பஞ்சம்!) நடுஇரவுவரை அலசிமுடித்து படுக்கச்சென்றோம். அதிகாலை ஆறுமணிக்கு மீண்டும் மைசூர் நோக்கி பயணமானோம்.... தொடரும்
திரும்பி வரும்போது தங்கக் கோவிலில் நான் க்ளிக்கிய சில படங்களின் ஒரு சிறு தொகுப்பு... (அடுத்த பதிவில் இளவஞ்சி, ஐய்யப்பன், மோகன்தாஸ், நந்து, லக்குமணராஜா போன்றவர்களின் படங்களில் சிலவும் பதிப்பிக்கப் படும்!)
படத்தை க்ளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்!














































