Sunday, July 22, 2007

புகைப்பட போட்டி முடிவுகள் - ஜூலை படம்

40 comments:
 
இந்த புகைப்பட போட்டி பற்றி செல்லாவின் அறிவிப்பை பார்த்தபோது இவ்வளவு பேர் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள் என நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
தமிழ் பதிவுலகில் புகைப்படக்கலை ஆர்வலர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே எனக்கு ஒரு மிகப்பெரிய செய்தி.

படங்கள் வர வர எனக்கு கிலி பற்றிக்கொண்டது!! படங்கள் எல்லாமே இவ்வளவு அழகாக இருக்கிறதே!! இதில் எதை எடுப்பது,எதை விடுப்பது??
படங்களை போட்டிக்களில் தேர்ந்தெடுப்பது பற்றி முன்பு ஒருமுறை எங்கோ படித்திருந்த ஒரு கட்டுரை தான் ஞாபகம் வந்தது. அது தவிர போட்டிக்கான படங்களை எந்த அளவுகோலின் மூலம் தேர்ந்தெடுப்பது என்று நாங்கள் இருவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டோம் . படங்களை சல்லடை செய்து அடுத்த சுற்றுக்கு எடுத்துக்கொண்டு போக முதலில் எங்களுக்கு தோன்றிய அளவுகோல் தலைப்பு. படங்கள் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எவ்வளவு பொருந்தியுள்ளது என்பதுதான் நாங்கள் முதலில் பார்த்தது.

இந்த போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு "இயற்கை". உலகத்தில் உள்ள அனைத்து பொருளும் ஏதாவது ஒரு விதத்தில் இயற்கையுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தை பார்த்தவுடன் நமக்கு இயற்கையின் வனப்பு ,அதன் சக்தி,அதன் அழகு என பல பரிமாணங்களை மனதில் தோன்ற வைக்கும் படங்களை பட்டியலில் தேட ஆரம்பித்தோம். அதுவுமில்லாமல் படத்தில் ஒரு குறிப்பான பொருள் (Subject) இல்லாமல் மொட்டையாக இருந்த படங்கள் அடுத்த சுற்றுக்கு தேரவில்லை.இப்படி தேரிய படங்களில் நம் மனதை கவரும் படங்கள் எவை என்று எங்கள் விழிகள் அலச ஆரம்பித்தது. உலகத்தில் எது அழகு எது அழகில்லை என்று யார்தான் கூறி விட முடியும்??? "Beauty lies in the eyes of the beholder" என்ற வாக்கியத்திற்கு ஏற்ப அழகு என்பது பார்ப்பவரை பொருத்தது. இருந்தாலும் எந்த வித பாகுபாடோ,விருப்பு வெறுப்போ இன்றி எங்கள் மனதில் அழகாக தெரிந்த படங்களை பிரிக்கலானோம்.

இதை செய்யும் பொழுது தான் "post processing" எனப்படும் படங்களின் மேல் செய்யப்படும் அரிதாரப்பூச்சின் அருமையை நான் மேலும் உணர்ந்து கொண்டேன். பல படங்கள் சற்றே Contrast அட்ஜஸ்ட் செய்தால் அழகை அள்ளிக்கொண்டு போனது. சிலவற்றை சற்றே crop செய்தால் பளிச்சென்று தெரிந்தது. சிலவற்றுக்கு framing சேர்த்துவிட்டால் அதனுள்ளே ஒளிந்திருந்த மிடுக்கு குபுக்கென்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது.
பெரிதாக Photoshop எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம்,Picassa போன்ற சுலபமாக உபயோகிக்க கூடிய மென்பொருள்களை வைத்துக்கொண்டுபடங்கள் அழகுர செய்யலாம். செல்லா, மக்களுக்கு இது பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லி வரும் போட்டிகளில் இதை உபயோகப்படுத்த வெச்சுருங்க தல!! :-)

இப்படி மெருக்கேற்றிய பின் சிறப்பான 2-3 படங்கள் என் நினைவில் தோன்றுகின்றன.



















இதற்கு அப்புறம் எங்கள் வேலை இன்னும் கஷ்டமாகிப்போனது. கையில் இருப்பது எல்லாமே அழகான இயற்கை படங்கள். ஆனால் இதிலிருந்து ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா?? என்ன கொடுமை சார் இது என்று தலையில் கையை வைத்துக்கொண்டோம்.இப்பொழுது இருக்கும் படங்களிலேயே ஏதாவது சிறப்பை பெற்ற படங்களை பிரிக்க ஆரம்பித்தோம். தனியாக பார்த்தால் மிக அழகாக இருக்கும் பல படங்கள் ,போட்டிக்காக வந்து குவியும் பல படங்களோடு ஒப்பிடும் போது ஏதாவது சிறப்பை பெற்றிருக்க வேண்டும்.

காடு,மலை,அலைகடல்,பூக்கள் என இயற்கை நம்மை சுற்றி இருக்க இதை எப்படியெல்லாம் எடுக்கலாம்?? பலரும் பார்க்காத மாதிரி கலைக்கண்ணால் பார்த்து வித்தியாசமாக எடுக்கப்பட்ட படங்கள் அடுத்த சுற்றுக்கு போயின. அழகாக இருந்தும் கூட சாதாரணமாக தோன்றிய சில படங்கள் தேங்கிபோயின. இதனால் படங்கள் சரியில்லை என்று அர்த்தமல்ல,ஆனால் போட்டியின் நிலையில் இருந்து பார்க்கும் போதும்,வந்திருக்கும் பல நல்ல படங்களை பார்க்கும் போதும் இவை அடுத்த சுற்றுக்கும் எடுத்து செல்ல முடியாத நிலை.
இப்பொழுது நிலைமை இன்னும் மோசம். கண்களை சுருக்கிக்கொண்டு தன் படை பலத்தை கணக்கு போடும் படைத்தளபதியை போல் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு படங்களை கழித்துக்கொண்டு வந்தோம். கடைசியில் ஆளுக்கு ஐந்து படங்கள் தேர்ந்தெடுத்து அதிலிருந்து கடைசியாக மூன்றை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்தோம். அதன் படி சர்வேசன் தனது தேர்வை மினஞ்சலில் அனுப்பினார். அதை பார்த்துவிட்டு நானும் என் தேர்வை ஆரம்பித்தேன். நெஞ்சை கொஞ்சம அதிகமாகவே கல்லாக்கிக்கொண்டதன் விளைவாக எனது தேர்வில் இரண்டுதான் தேறியது. பின் எல்லா படங்களையும் திரும்பப்பார்த்து ஐந்து படங்களை பட்டியலிட்டேன்.
இப்பொழுது எங்கள் இருவரின் தேர்வில் இரண்டு மூன்று படங்கள் ஒத்துப்போனது. அப்படி ஒத்துபோகாத படங்களில் இது ஒன்று.



படம் நன்றாக வந்திருக்கிறது என்பதில் சற்றும் ஐயமில்லை,ஆனால் இந்த படத்தில் மரம் சற்றே வலது புறம் இருந்தால் இன்னும் அழகாகி இருக்கும் என்று எனக்கு தோன்றியது. இதெல்லாம் ரொம்ப ஓவரு,இப்படியெல்லாமா பார்ப்பார்கள் என்று உங்களுக்கு தோன்றலாம் ,ஆனால் போட்டி யென்று வந்து விட்டால் என்ன செய்வது???

படத்தை சற்று crop செய்தபின்


அதுவும் தவிர AN& எங்கள் குழுப்பதிவில் ஒருவராக சமீபத்தில் சேர்ந்திருந்ததால் இந்த படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது.

எங்கள் தேர்வில் ஒருவரால் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னொரு படம் இதோ.

திரும்பவும் "eye of the beholder"ஐ தான் மேற்கோள் காட்ட வேண்டி இருக்கிறது. எங்கள் இருவரில் ஒருவருக்கு இது இயற்கையின் சக்தியையும் , பரந்து விரிந்த தன்மையையும் எடுத்து காட்டியதாக தோன்றியது.இன்னொருவருக்கோ மாலை நேரத்தில் சாதாரணமாக தோன்றும் ஒரு காட்சியை பிரதிபலிக்கும் ஒரு படம் என்று தோன்றியது.


மேலேயுள்ள அல்வாசிடியின் இந்த படமும் அப்படித்தான். ஒருவர் அது பழமையும் புதுமையும் இணைந்த இயறகையின் அழகை பிரதிபலிப்பதாக கூறினார். ஆனால் இன்னொருவருக்கோ சரியான கோணத்தில் எடுக்கப்படாதது போலவும், பேக் க்ரவுண்டில் தொலைந்து போன கோடுகள் மட்டுமே தெரிந்தது. இப்படியாக கடைசியில் எஞ்சிய மூன்று படங்கள் உங்கள் முன் இதோ.

மூன்றாவது இடத்தில் இருப்பது,ஜெயகாந்தனின் இந்த படம். பார்த்தவுடன் இருவருக்குமே பிடித்து விட்டது. Macro எனப்படும் பொருள்களின் கிட்டே எடுக்கும் உத்தி கொண்டு அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. பூவின் அழகை மிக சமீபத்தில் போய் நாம் சாதாரணமாக பார்க்காத கோணத்தில் இதை எடுத்திருக்கிறார். அதுவும் இல்லாமல் படத்தின் நடுவில் focus தெளிவாக தெரிந்து,ஓரங்களில் blurred ஆக இருப்பது மிக அழகான ஒரு உத்தி. DOF பற்றி பதிவு வரும்போது இதை பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதை இவர் கேமராவை நன்றாக Zoom செய்ததால் தானே அமைந்துவிட்டதா அல்லது ஏதாவது மென்பொருளை கொண்டு அந்த effect-ஐ ஏற்படுத்தினாரா என்று தெரியவில்லை. அதை அவர் பின்னூட்டத்தில் அறிவித்தால் நன்றாக இருக்கும். பூவின் நிறம்தான் எனக்கு ஒரு மாதிரி இருந்தது,ஆனால் அதற்கு புகைப்படம் பிடித்தவரை குறை சொல்ல முடியாது!! :-)
வாழ்த்துக்கள் ஜெயகாந்தன்!! :-)


இரண்டாவது இடத்தில் தீபாவின் இந்த படம். இந்த படத்திலும்் DOF நன்றாக அமைந்திருக்கிறது.ஏதாவது மென்பொருள் உபயோகப்படுத்தினாரா என்று அவர்தான் சொல்ல வேண்டும்.இலையை நன்றாக கம்போஸ் செய்து இருக்கிறார் மற்றும் framing கூட இந்த படத்தில் நன்றாக அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள் தீபா!! :-)



முதல் படத்தை தேர்ந்தெடுப்பதில் எங்கள் இருவரிடமும் எந்த கருத்து வேற்றுமையும் இல்லை. பட்டியலில் உள்ள எல்லா படத்தையும் பார்க்கும் போதே இந்த படம் தனியாக அழகாக தெரிந்தது. படத்தின் பளிச்சென்ற நிறங்களும் தெளிவான பட அமைப்பும் இந்த படத்தை முதல் இடத்திற்கு தள்ளி விட்டது. இந்த படத்தின் பொருளை் (subject) சிரத்தை எடுத்து கம்போஸ் செய்திருக்கும் லாவகம் படத்தை முதல் பார்க்கும் போதே என்னால் அறிய முடிந்தது. நடுவில் சற்றே மறைக்கும் இலையால் கொஞ்சமே கவனம் சிதறினாலும் படத்தின் மற்ற அம்சங்கள் நம் கண்களை கட்டி இழுக்க வைக்கிறது. இந்த படத்திலும் சுப்ஜெக்ட்டின் மீது focus தெளிவாகவும்,மற்ற பொருள்கள் blurred ஆகி இருப்பது சிறப்பு.
முதல் இடத்தை பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி!! :-)



கொசுறு : இந்த படத்துல நம்ம முப்பகுதி கோட்பாடு எவ்வளவு சூப்பரா ஒர்க் அவுட்டு ஆயிருக்கு பாத்தீங்களா??? :-)

முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்,படத்தை பிடித்த கேமரா,எடுத்த இடம், mode (automatic mode,program mode,aperture mode etc) போன்றவற்றை அறிவிக்கலாமே!! :-)

மூன்று படங்களை தேர்ந்தெடுத்து போட்டிருந்தாலும்,இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ஆர்வத்துடன் உங்கள் படங்களை அனுப்பி போட்டியை சிறப்பித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த முறை தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் உங்கள் திறனை வளர்த்துக்கொண்டு அடுத்த முறை போட்டி வரும்போது பட்டையை கிளப்புங்கள். விமர்சங்களை வழங்கியதில் யாருக்கேனும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க!!
இந்த போட்டியை ஆரம்பித்து அதில் பங்களிக்க வாய்ப்பளித்த செல்லாவுக்கு நன்றி

வரட்டா?? :-)

பிகு: இளவஞ்சிக்கு வாழ்த்து சொல்ல இங்கே செல்லுங்கள்!

40 comments:

  1. வாழ்த்துக்கள் ஆசானே!

    ReplyDelete
  2. ஜெயகாந்தன்

    அக்கா தீபா

    ஐயா இளவஞ்சி அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்;)))

    ReplyDelete
  3. முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!

    சூப்பரான படங்களை சிரமம் பார்க்காமல் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற மூவருக்கும், போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் (???) வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    போட்டியை நடித்தியவர்களுக்கு நன்றியும்! வாழ்த்தும்!

    ReplyDelete
  6. முதல் மூவருக்கும் வாழ்த்துக்கள். இளவஞ்சியின் படத்தை பார்த்ததும் எடுத்ததும் அசந்துப் போனது உண்மை. இது உண்மையில் உங்களுக்கு கடினமான வேலை தான்.

    அது போல் என்னுடைய படத்துக்கு கொடுத்த பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. நிழற்படக்கலையை கற்றுக்கொண்டிருக்கும் எனக்கு உண்மையில் இது உதவி புரியும். நன்றி. அடுத்த போட்டு எப்போ??? ;-))

    ReplyDelete
  7. அருமையான தேர்வு. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். செந்தழலுக்கு பரிசு ஏதும் இல்லையா?

    ReplyDelete
  8. Unmaiyai sonnal ithu ungkalukku kadinamaana savaalthaan. thangkal selection kooda mika arumai. kuRaisolla mudiyaatha padam ilavanjiyudaiyuthu.A&n padangkaL ... avarai aasiriyar aakkiyathaal thappithom! maRRapadi ovvorutharum asathinaarkaL.

    உண்மையில் திலகபாமாவின் படம் கொஞம் மெருகேற்றியிருந்தால் ஒரு மிகப்பெரும் படமாக இருந்திருக்கும்.இயற்கையின் உருவாக்கம்/பரவல்/பெருக்கம் போன்றவற்றை வெகு அழகாக கொடுத்த படம்.

    இதிலிருந்து தெரிவது என்னவென்றால்

    1. நீங்கள் போட்டிக்கு அனுப்பும் படங்களின் தலைப்பை உங்கள் படம் எந்த அளவு பிரதிபலிக்கிறது என்று பாருங்கள்.

    2. நீங்கள் எடுத்த படத்தை சிறிது வெட்டி சீர்படுத்தினால் மிக அழகான படம் கிடைக்கும்.நாங்கள் இமேஜ் எடிட் பாடங்களையும் தொடங்க உள்ளோம்!

    3. ப்டம் எடுக்கும்போதே மனதில் ஃபிரேம் செய்து பாருங்கள்!

    4. முடிந்த அளவு இந்த வலைப்பூவிற்கு வாரம் ஒரு முறையாவது சைட் அடிக்க வாருங்கள் !

    5. இப்பொழுது புரிந்திருக்கும்.. யார் யாருக்கெல்லாம் புகைப்பட ஆர்வம் உண்டென்று.. போட்டிக்கு படம் சமர்ப்பிக்குமுன் அவர்களுக்கு (சக போட்டியாளராக இருந்தாலும்) மின்னஞ்சலில் அனுப்பி கருத்துக்கேட்கலாம். எதைப் போடலாம் என்று!
    6. உங்கள் நடபு வட்டம் மேம்போக்காக இல்லாமல் கலை சார்ந்த நட்புவட்டம் உருவாகட்டும். நல்ல ப்டைப்புகள் நம்மிடம் மலரும்

    7.இந்த மாதிரி போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்ளுங்கள். எனக்கும் போட்டிகளிலெல்லாம் நம்பிக்கை இல்லை... ஆனாலும் அவற்றை கற்றுத்தேரும் இடமாக பார்க்கிறேன். மாரத்தான் போட்டிகளில் ஆயிரக்கணக்கான கால்களில் என்கால்களும் ஓடுவதை பெருமையாக நினைக்கிறேன் என்று ஒரு வயதான நியூயார்க் மனிதர் சி.என்.என் நிருபரிடம் சொன்னார். அந்த மனநிலை மட்டும் இருந்தால் போதும் இந்த மாதாந்திர போட்டிகளில் கலந்துகொள்ள என்று கூறி... இந்த மாதிரி ஒரு அசத்தலான கிரியேட்டிவ் வலைப்பூ விசயத்தை உருவாக்கியளித்த நண்பர் ஜீவ்ஸ், நடுவர்கள் CVR மற்றும் சர்வேசனுக்கும் நன்றிகூறி விடை பெறுவது.... ஓசை செல்லா

    ReplyDelete
  9. வெற்றி பெற்ற ஜெயகாந்தன், தீபா, இளவஞ்சி ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்.

    போட்டியில் ஆர்வத்துடன் பங்குபெற்றி போட்டியை மெருகேற்றிய அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    எத்தனையோ வேலைப் பளுவுக்குள்ளும் இப் போட்டியைத் திறம்பட நடாத்தி முடித்த செல்லா, சர்வேசன், CVR, AN& அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

    அடுத்த போட்டிக்கான தலைப்பை சுறுக்காய்ச் சொல்லுங்கோ!!! இப்பவே ஆயத்தப்படுத்த வேணும்.
    :-))

    ReplyDelete
  10. ஜெயகாந்தன் மற்றும் இளவஞ்சிக்கு என் வாழ்துக்கள்

    Details of my pic
    Canon Power shot A70 - Macro mode - Morning7.30 am - My backyard

    வெறும் தியரி மட்டும் இல்லாது.. பிராக்டிலா புகைப்பட கலையை கற்றுகொள்ளவும் இந்த போட்டி ஒரு பெரிய
    motiovation.. thanks for the oppurtunity

    ReplyDelete
  11. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து !

    சிலப் படங்கள் நிஜமாகவே அசர வைத்தன.

    102 படங்களில் மூன்றை தேர்ந்து எடுப்பது கடினம்தான்.
    ஏன் இந்த படங்களை தேர்ந்து எடுத்தார்கள் என்று இன்னமும் கொஞ்சம் விளக்கி இருக்கலாமோ ?

    ReplyDelete
  12. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    வெற்றிபெற்றவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்....

    செந்தழலில் போட்டோவை தேர்ந்தெடுக்காது போன நடுவர்கள் குழுவுக்கு வருத்தங்கள் :)))))))))))

    ReplyDelete
  13. an&,

    //102 படங்களில் மூன்றை தேர்ந்து எடுப்பது கடினம்தான்.
    ஏன் இந்த படங்களை தேர்ந்து எடுத்தார்கள் என்று இன்னமும் கொஞ்சம் விளக்கி இருக்கலாமோ ?//

    ரொம்பவே கஷ்டமாதான் இருந்தது.
    போட்டித் தலைப்பை, நல்லா ப்ரதிபலிக்கரமாதிரி 'நச்சுனு' இருந்த படங்களை வரிசை கட்டினோம்.

    ஆசிரியர் குழுவில் இருப்பவர்களின் படத்தை, கண்டுக்கல, அதனால வேல ஈஸி ஆயிடுச்சு :)

    ReplyDelete
  14. செந்தழல் ரவி,

    என் மனசுல உங்க போடோவுக்குத் தான் முதலிடம் :)

    என்னிக்கு ஊர விட்டு கெளம்பரீங்க? அடுத்த போட்டித் தலைப்பு 'தாய்லாந்து நங்கைன்னு' வச்சுடலாம், விதவிதமா சுட்டுத் தள்ளுங்க :)

    ReplyDelete
  15. ஒவ்வொரு ரவுண்டிலயும் தேர்வான படங்களையும் கொஞ்சம் சுட்டி இருக்கலாமோ? அந்தப் படங்களின் நல்லது கெட்டது சொன்னா அதிலருந்தும் கத்துக்க முடியுமே. அடுத்தடுத்த வாரங்களில் செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும். பிழைகளையும் போகப்போகத் திருத்திக்க முடியும்.

    வெற்றி பெற்ற புகைப்படங்களைப்பற்றி இன்னமும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்க்கலாம் என்று தோன்றுகிறது.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நடுவர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. sarvesan is preparing his notes on not only the winning images... but on all the entries. Give him some time!

    ReplyDelete
  17. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இளவஞ்சியின் படம் முதலிடம் பிடிக்கும் என அப்போதே என் மனம் சொன்னது. :)

    நல்ல தேர்வு.

    ReplyDelete
  18. போட்டி ஏற்பாட்டளார்களுக்கும்,போட்டியாளர்களுக்கும் மிக்க நன்றி...

    என்னுடைய புகைப்படம் பற்றிய சர்வேசன் கருத்துப்ற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்..

    குறும்பட போட்டி நடத்த எண்ணமேதும் இருக்கிறதா..

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  19. புகைப்படக்கலையைப் பற்றி தமிழில் சுவாரசியமாக விவாதிக்கவும், அறிந்து கொள்ளவும் வழி செய்துள்ளீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற இளவஞ்சி, தீபா மற்றும் ஜெயகாந்தன் இவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஐயா இளவஞ்சி.

    போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றிகள்.

    //sarvesan is preparing his notes on not only the winning images... but on all the entries. Give him some time!//

    looking forward for the comments.

    ReplyDelete
  21. @செல்லா
    //4. முடிந்த அளவு இந்த வலைப்பூவிற்கு வாரம் ஒரு முறையாவது சைட் அடிக்க வாருங்கள் !//
    சைடுபாரில் நான்கைந்து பிகருகள் போட்டோக்கள் போட்டு அவற்றை வாரா வாரம் மாற்ற திட்டமா??? :P
    Kidding!! :-)

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் கூறிய இதயங்களுக்கு என் நன்றிகள்!! :-)

    @அனானி
    //ஒவ்வொரு ரவுண்டிலயும் தேர்வான படங்களையும் கொஞ்சம் சுட்டி இருக்கலாமோ? அந்தப் படங்களின் நல்லது கெட்டது சொன்னா அதிலருந்தும் கத்துக்க முடியுமே. அடுத்தடுத்த வாரங்களில் செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும். பிழைகளையும் போகப்போகத் திருத்திக்க முடியும்.//
    ஒவ்வொரு படங்களை பற்றிய தன் குறிப்புகளை நண்பர் சர்வேசன் தயார் செய்து கொண்டிருக்கிறார்.நானும் பின்னூட்டங்களில் எனக்கு தோன்றுவதை பகிர்ந்து கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.
    Analysis is not done yet. :-)

    இந்த விமர்சனம் எழுதும் போது யார் மனமும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறாத படங்களை உதாரணம் காட்ட வேண்டாம் என்று தோன்றியது.
    ஏற்கெனவே பதிவு பெருசாகிக்கொண்டு போனது அதனால் இதற்கு மேலும் சேர்க்காமல் இத்தோடு முடித்து விட்டேன்

    ReplyDelete
  23. //நடுவில் சற்றே மறைக்கும் இலையால் கொஞ்சமே கவனம் சிதறினாலும் படத்தின் மற்ற அம்சங்கள் நம் கண்களை கட்டி இழுக்க வைக்கிறது//

    இது குறித்து பகுதிநேரமாக மீடியா படப்பிடிப்பாளராக இருக்கும் எனது மகனுக்கும் எனக்கும் ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அந்த குறுக்கிடும் இலைதான் அப்படத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணம் என தீர்க்கமாக வாதிட்டான். மற்றும் படி போட்டியின் தீர்ப்பு மிகச் சரியான தீர்ப்புக்கும், போட்டியாளர்களின் ஆர்வத்திற்கும், பாராட்டுக்களும், நன்றிகளும்.

    ReplyDelete
  24. நன்றிங்க!

    ரொம்ப சந்தோசமா இருக்கு! :)

    இந்த படம் எடுத்து ஒரு வருசம் ஆகுது. மணப்பாறை அருகில் வயக்காட்டில் எடுத்தது. கேமரா Sony DSC H1. f/4.5, 72mm, 1/500 Sec.

    படம் எடுக்கும்போது மனதில் நினைத்தது.

    1. படத்தில் 3 லேயர்கள் இருக்கவேண்டும். போகஸ் நடுலேயரான பூவில் இருக்கவேண்டும்.

    2. படத்தில் குறுக்கே விழும் இலையையும் வேண்டுமெனவே கம்போஸ் செய்ததுதான். இல்லையெனில் இது சாதாரண வட்ட வடிவ பூவின் படமாக ஆகியிருக்கும் என கருதினேன். சூரியனை வெறும் வட்ட வடிவமாக பார்க்காமல், அதன் முன் ஒரு மேகக்கூட்டத்தை சேர்த்தால் அழகா இருக்குமல்லவா? அப்படி பூவினை சூரியனாகவும் அந்த இலையை மேகமாகவும் நினைத்து எடுத்தது இது. ( உங்களுக்கு வேற வழியில்லைங்க! இப்ப நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பித்தான் ஆகனும்! :))) )

    பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

    வெற்றி பெற்ற தீபா காய்விட்டு அப்பறம் பழம் விட்டுக்கிட்ட புதுசா கிடைச்ச ஃப்ரெண்டு! ஜெயகாந்தன் என் பள்ளித்தோழன்! அந்தவகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! :)

    நடுவர் வேலை பார்த்த சர்வேசனுக்கும் டபுள் ஆக்டிங் ஸ்பெஷல் CVRக்கும் இது நிஜமாகவே சிரமமான வேலைதான். பாராட்டுகளும் நன்றிகளும்! இருந்தாலும் ஒரு வேண்டுகோள். போட்டிக்கான களமாக இல்லாமல் கத்துக்கறதுக்கான களமாக மட்டுமே நாங்க கருதுவதால், தேர்வாகாத படங்களில் உள்ள குறைகளையும் அதனை களையும் முறைகளையும் வரும் பதிவுகளில் விளக்கினால் அனைவருக்கும் மிகவும் ஆக்கப்பூர்வமான இருக்கும். போட்டியை நிர்வகித்த செல்லாவுக்கு நன்றிகள்.

    எல்லோருக்கும் ஆறுதல் பரிசினை பரிந்துரைத்த செந்தழராருக்கு பரிசு கொடுக்காததை கண்டித்து அண்ணாரின் சார்பாக நானும், அவரது போட்டோ "Subject"உம் கலந்தாலோசித்து போராட்ட முடிவுகளை விரைவில் அறிவிப்போம் என எச்சரித்துக்கொள்கிறேன்! :)))

    ReplyDelete
  25. மலைநாடன்,

    // இது குறித்து பகுதிநேரமாக மீடியா படப்பிடிப்பாளராக இருக்கும் எனது மகனுக்கும் எனக்கும் ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அந்த குறுக்கிடும் இலைதான் அப்படத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணம் என தீர்க்கமாக வாதிட்டான்.//

    இப்பத்தான் இதை சொல்லிட்டு வந்தேன். உங்கள் மகனும் அதையே சொல்லியிருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள்!

    இந்த நாள் இனிய நாள்! :)))

    ReplyDelete
  26. @மலைநாடான் மற்றும் இளவஞ்சி
    வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நடுவில் இருக்கும் இலை பற்றி எனக்கும் இது போன்ற ஒரு கருத்து உண்டு. நேரடியாக தெரியும் ஒரு விஷயத்தை விட சற்றே மறைக்கப்படும் விஷயத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடும். அது மனித இயல்பு.
    வரும் பதிவுகளில் இதை பற்றி எல்லாம் விவாதிக்கலாம் என்று எண்ணம்.
    இந்த இலைமறை போன்று நான் எடுத்திருந்த படம் இதோ (this one is a macro).
    இந்த படத்தை சில பேருக்கு பிடித்திருந்தது,சில பேருக்கு பிடிக்கவில்லை.
    "Eye of the beholder"தான்!! யார் சரி ,யார் தவறு என்றெல்லாம் பார்க்க முடியாது.
    ஆனால் சற்றே மறைப்பது சில பேருக்கு distraction-ஆக தோன்றுவதையே இது காட்டுகிறது.
    Whether they like it sub-consciously even when they dont seem to like it outwardly is another topic for discussion!! :-)

    ReplyDelete
  27. இளவஞ்சி! CVR!

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    CVR! உங்கள் படைப்பும், கருத்தும் மிக்க அழகு. என் மகனின் படைப்புக்கள் சிலவற்றை
    இங்கே காணலாம்.

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் இளவஞ்சி, தீபா!

    எல்லோருடைய பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!

    இந்த படத்தை இந்தோனேசியாவிற்கு சென்ற போது தமன் பூங்காவில் ஜனவரி 2006 மாலை 3:00 மணிக்கு எடுத்தது.
    கேமரா: Canon A410 (விலை குறைந்ததானாலும், பல நல்ல features கொண்டது.)
    Resolution: 1600×1200 pixels – 367KB
    Exposure: 1/320 sec
    Aperture: f/2.8
    Focal Length: 5.4mm

    படத்தை எடுக்கும் போது சற்று கோனலாக எடுக்க நினைத்தேன். கேமராவில் சிங்கில் பாயிண்ட் போகஸ் செய்த்ததால் நடு பகுதி சற்று தெளிவாகவும்,மற்ற இடங்கள் ப்ளர்ட்டாகவும் தெரிகிறது (என்னோட எண்ணம்!). இதற்கு சாப்ட்வேர் உபயோகபடுத்தவில்லை.

    இதனுடன் மேலும் இரு படங்கள் (மேக்ரோ மோடில்) எடுத்தேன் - இங்கு க்ளிக்கவும்..

    ReplyDelete
  29. வெற்றி பெற்ற மூன்று படங்களில் இரண்டு மேக்ரோ வகைப்படங்கள், மற்றது Shallow DOF .

    அடுத்த முறை இவர்கள் இரண்டு பேரும் நடுவர்கள் ஆகும் போட்டியில் எந்த வகை படங்கள் போடவேண்டும் என்று நல்ல க்ளூ கிடைத்துவிட்டதா ;-))

    ReplyDelete
  30. அருமையான தேர்வுகள். ஜெயகாந்தன், தீபா, இளவஞ்சி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. A&N... I want your viws for a few of your fav images.

    ReplyDelete
  32. வாழ்த்துகள் :)

    கஷ்டமான வேலையை செஞ்ச நடுவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  33. @ஜெயகாந்தன்
    படத்தை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    உங்கள் மற்ற இரு படங்களை பார்த்தேன்.
    நீங்கள் போட்டிக்கு அனுப்பிய படத்தை விட அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன!! :-))))

    @AN&
    படங்களை பார்க்கும் போது மனதிற்கு பிடிக்க வேண்டும் தலைவா, இந்த DOF,rules எல்லாம் அதற்கு பின் நாமே சேர்த்துக்கொள்வது.
    Just to explain ourselves why they look good.
    நல்ல படங்களை தேர்ந்தெடுத்தோம். தேர்ந்தெடுத்தபின் DOF போன்ற சிறப்புகளை கவனித்தோம்!! :-)
    not vice versa! :-D

    @ஜிரா மற்றும் பாஸ்டன் பாலா
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  34. வெற்றி பெற்ற இளவஞ்சிக்கும், தீபாவுக்கும் வாழ்த்துக்கள்.. இவ்வுளவு படங்களுக்கு இடையில் சிறந்த படத்தை தேர்வு செய்த நடுவர்களுக்கு சபாஷ். அப்படியே மற்ற படங்கள் குறித்தான உங்கள் கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும். விமர்சனமாக எடுத்துக்கொண்டு சொன்னால் மிகவும் நன்று எங்களுக்கு அது கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

    ReplyDelete
  35. Congratulations winners.. Although,I'm surprised that all the prizes went to flowers based fotos..(though they thouroughly deserve them..).. I feel Nature is lot more than flowers.. just wondering a few more variety would have been highly appreciated.. eagerly expecting the August Contest..

    ReplyDelete
  36. Ila,Deepa and jayakanthan..
    Vaazthukkal...!!

    ReplyDelete
  37. CVR:
    //ஜெயகாந்தன்
    படத்தை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    உங்கள் மற்ற இரு படங்களை பார்த்தேன்.
    நீங்கள் போட்டிக்கு அனுப்பிய படத்தை விட அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன!! :-))))
    //
    பாராட்டுக்கு நன்றி! நானும் அதே தான் நினத்தேன். ஆனால் இரு மேக்ரோ படங்கள் அனுப்ப வேண்டாம் என நினைத்து விட்டுட்டேன்!

    ReplyDelete
  38. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    படங்கள் வர வர போட்டி எங்களுக்கா இல்லை நடுவர்களக்கா என நினைத்தேன். அழகாக தீர்ப்பினை தந்த நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. வணக்கம் இரண்டு மூன்று நாட்களாய் இணையம்பக்கம் வரமுடியவில்லை. வெற்றி பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்.எனது படம் பற்றிய கருத்துக்களைச் சொன்னவர்களுக்கும் எனது நன்றிகள்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff